வெள்ளி, 29 நவம்பர், 2013

அழகுநிலாக்காயுது

அழகுநிலாக்காயுது

தனியாய் காயுது தங்க நிலா - நீ
தவழும் அழகோ மேக உலா
பார் முழுதும் உன் பாலொளியே - இது
பகலா இரவா புரியலியே

தாரகை குஞ்சுகள் கண் சிமிட்டும் - ஒரு
தலைவனைப் போலுடல் பவனிவரும்
கார்மேகம் உன்னை சூழ்கையிலே - என்
கவலையை நீதான் அறிவாயோ

வில்லுரு போன்றே தோன்றுகிறாய் - நீ
விரைவாய் நாளும் வளருகிறாய்
பருவம் பூரணமானதுமே - பாவம்
பழைய நிலைக்கே மாறுகிறாய்

பனித்துளி முழுவதும் மினுங்குகிறாய் - நீர்
பாத்திரத்தில் வந்து பதுங்குகிறாய்
ஆடியிலே உன்னை சிறைப்பிடிக்கும் - சிறு
ஆனந்தத்தில் நான் பாடுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக