செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

நீயென்ன அமலாபாலா
விழியென்ன யாழா வாளா
வருவாயா எந்தன் ஆளா
தருவேனே கூலா கோலா
                                                                                      -நீயென்ன-

செல்லச்சண்டை பிடிப்போம் வா
சேர்ந்து பாட்டுப்படிப்போமா
குத்துச்சண்டை குங்பூ எல்லாம்
கத்துத்தாரேன் வா..வா வா..வா....
                                                                                      -நீயென்ன-

வாலி உன்னை காணாமல்
வைரமுத்து கேளாமல்
கண்ணதாசன் கவிதை போலே
பூவும் காயும் பழமும் நீதான்....
                                                                                     -நீயென்ன-

நிலவில் சென்று ஒழிவோம் வா
நீந்தி கடலில் குளிப்போமா
விரியும் உந்தன் இதழின் இடையில்
விடியவிடிய கவிதை படிக்க...
                                                                                     -நீயென்ன-

-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்
என் செல்ல பொம்மை
-------------------------------
சின்ன பொம்மை ஆடுது - அது
சிலுக்கு சட்டை போடுது
அழகு பாட்டு பாடுது - அது
அலுப்பில்லாமல் ஆடுது

                                                                           -சின்ன..-

தம்பி தங்கை கூடவே - தன
தனக்கு தாளம் போடவே
தரையில் நின்று ஆடுது - அது
தலையை தலையை ஆட்டுது

                                                                          -சின்ன...-

சின்ன கைகள் அசைக்குது - அதன்
சிலுக்கு சட்டை சுழலுது
சிமிட்டி சிமிட்டி கண்களை - என்
செல்ல பொம்மை ஆடுது

                                                                          -சின்ன....-
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.

வண்ணப்பூக்கள் பாராயோ
----------------------------------
வண்ண வண்ண பூக்கள் பார் - அது
வடிவாய் மலர்ந்து மணக்குது பார்
வெள்ளை நிறத்து பூக்கள் எல்லாம் - ஏனோ
இரவில் தானே மலர்கிறது

                                                                                                            -வண்ண-

விரிந்த தாமரை குளத்தில் பார் - நாம்
விரும்பும் ரோஜா முள்ளில் பார்
நீல அல்லிப்பூவிடையே - நின்று
நீந்தும் மீன்கள் துள்ளுது பார்

                                                                                                            -வண்ண-

உலகில் பெரிய மலரை பார் - உயி்ர்
கொல்லும் மலரும் உள்ளது பார்
அழகு மலரின் அதிசயம் பார் - அதில்
ஆபத்தும் உள்ளதை எண்ணிப்பார்

                                                                                                           -வண்ண-

பூக்களில் எத்தனை நிறம் உண்டோ - அதில்
அத்தனை அத்தனை குணம் உண்டாம்
ஈக்களும் தேனீ பூச்சுகளும் - பூவில்
எடுக்கும் தேன் துளி அரு மருந்தாம்

                                                                                                          -வண்ண-
-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்.
வீதி ஒழுங்கைப் பேணிடுவோம்
-------------------------------------------

வலது பக்கம் நடந்திடனும் - நாம்
வரிசையாகவே நடந்திடனும்
வீதி ஒழுங்கை பேணிடனும் - நாம்
விபத்துக்கள் தவிர்த்து வாழ்ந்திடனும்

அகல வீதி கடந்திடனும் - முன்பு
அக்கம் பக்கம் பார்த்திடனும்
அவசரமாக கடந்திடனும் - வரும்
ஆபத்து உணர்ந்து நடந்திடனும்

மஞ்சள் கோட்டாள் கடந்திடனும் - தினம்
மறவாமல் அதனை பேணிடனும்
தரிப்பிடம் தனிலே தரித்து நின்று - நாம்
ஏற இறங்க பழகிடனும்

அம்மா அப்பா கைப்பிடித்து - அவர்
அறிவுரை சொற்படி ஒழுகிடனும்
ஆட்டம் போட்டு வீதியிலே - பிறர்
அவஸ்தைப்படுவதை தவிர்த்திடனும்

-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்
நீலக்கடலினை இரசிப்போமா
----------------------------------------
நீலக்கடலினை பார்ப்போம் வா – அதில்
நீந்தும் ஓடம் இரசிப்போம் வா
துள்ளும் கடலலை இரைச்சலிலே
துரத்தி நண்டு பிடிப்போம் வா

சிரித்து மகிழ்ந்து மடிநிறைய
சிப்பி சங்கு சேர்ப்போம் வா
சரிந்து சரிந்து கடலலைகள்
விரைந்து வருவதை இரசிப்போம் வா

மிதக்கும் கப்பல் பார்ப்போம் வா – அங்கு
மீனவர் வாழ்க்கை அறிவோம் வா
மண்ணால் வீடு அமைத்தங்கு
உடைத்து உடைத்து மகிழ்வோம் வா

காலைச்சூரியன் பார்ப்போம் வா - அந்த
காட்சி இறைவன் சாட்சியடா
அந்தி நேரம் பந்தாட நாம்
அம்மா அப்பா அழைப்போமா

-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்