திங்கள், 20 ஜனவரி, 2014

என்னே வரவேற்பு 2014-01-01 எனும் தேதிக்கு

என்னே வரவேற்பு
2014-01-01 எனும் தேதிக்கு
---------------------------------------
தேதி சுமந்திருக்கும் நாள்பற்றி
யாரும் கண்டுகொள்வதாயில்லை
இப்படித்தான் ஒருநாள் எல்லா நாட்களும் கடந்தன
என்பதுபற்றி

அப்படியென்ன நோக்காட்டை
பதிவுசெய்தது சென்ற ஆண்டு ?
இப்படித்தானே வரவேற்றோம்
மாலைகளணிந்து பட்டாசுகள் வெடித்து

சில பாற்பானைகள் வழிய வழிய பொங்கியதே
எதனைக்கண்டோம்
பெரிய சிறிய கொப்புளங்களைத்தவிர

எல்லா இரவுகளையும் போல்
இன்றும் புலர்ந்தது புணர்ந்தது..
யாருமதில் திருந்திக்கொள்வதாக
அல்லது திருந்திவிட்டதாக சத்தியங்கள் செய்து
புது வாழ்வுக்குள் புகுந்துவிட்டதாய்
காகம் கத்தி பொழுதுபட்டஇதுவரைக்கும்
என் காதுகளுக்குள் இரையவில்லை

நாளையும் போனவருஷம் கூவிய
அதே சேவல்கூவும் குயில் கூவும்
பொழுதுவிடியும் - இனி
எல்லோரும் பழைய வாழ்க்கைக்கு
பழக்கப்டுவார்கள்

நான் எப்போதும் போலவே மரங்கொத்தி தானே.....


- கிராமத்தான் கலீபா -
பொத்துவில்.
வேறாக்கி கிடத்திடமுடியாமல்
வேரோடிக்கிடக்கும் மனதின் ஆழத்தில்----

என் பிறந்த நாள் பரிசாக
நீ உதிர்த்துப்போன புன்னகையும்
பிரிவுகளின் தவிப்புகள்
சிந்தும் கண்ணீர்த்துளிகளும்
உன்னில் எனக்கு பெறுமதியானவை

மெல்ல மெல்ல நகரும் பொழுதுகள்
வாழ்வின் பாகங்களை
சிதைத்துக்கொண்டே செல்லும்
ஓர் இரவின் ஓரத்தில்
உன் ஞாபகங்கள் சுமக்கும் என்னை
தனிமைப்படுத்திவிடுகிறது

கனவுகள் பூச்சியங்களாகும்
கருத்தரிக்காத இரவுகளில்
உன் பிரம்மையின் பொய் நிழல் தழுவும்
என் உடல்
பாயோடு இழையோடிக்கிடக்கும்
நீ வந்து நோய்விசாரித்துச் செல்ல…

-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்