திங்கள், 11 நவம்பர், 2013

நீங்கா தவள் நினைவு

ஒளிர் நிலவின் சுடர் பொருளால்
உடலமைந்த பெண்டு
அல்லி மலர் தாங்கும் - சிறு
கொடியுடைத்த செண்டு

முல்லை மலர் பூத்து நிற்கும்
புன்னகையின் ஓரம்
முத்து மணி ரத்தினமும் - பொற்
சித்திரத்துச் சாரம்

முக்கனியும் சாறுமிவள்
சொற்களிலே ஊறும்
முகை வெடித்து விரியுமிதழ் - மேனி
மென்மையினை கூறும்

வேல் விழிக்குள் மீனிரண்டு
மெல்ல மெல்ல நீந்தும்
கார்குழலில் மல்லிகைப்பூ - இளம்
காற்றில் மணம் வீசும்

நீள்விரலை சுண்டிழுத்து
நெட்டிவிடத்தோன்றும் - பொன்
மோதிரத்து விரல் பிடித்து
போக மனம் எண்ணும்

அரும் சித்திரத்துச் சிற்பமொன்று
தாவணியில் செல்லும்
அச்சடித்த அவள் நினைவு - என்
அடிமனதில் துள்ளும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக